இந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்: 2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள்...!
இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் சிக்னல்கள், ஒரு மீட்டர் நீள விமான துண்டு பொருட்கள், சக்கரம் மற்றும் மனித உடல் பாகங்கள் கிடைத்து உள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.
ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு 189 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கு பின் பெரிய அளவில் நடந்த முதல் விமான விபத்து இதுவாகும்.
விமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பேகஸ் புருஹிட்டோ கூறும்பொழுது, 2 இடங்களில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளன என கூறியுள்ளார்.
இதேபோன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு மீட்டர் நீளம் கொண்ட துண்டு பொருட்கள், சக்கரம் ஒன்று மற்றும் மனித உடல் பாகங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. உடல் பாகங்களை அடையாளம் காண போலீஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது.
No comments